நான் சென்று வந்த, ஆனால் மக்களுக்கு அதிகம் தெரியாத சில இடங்களைப் பற்றி இனி வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலில் நாம் காணவிருப்பது, மதுரைக்கு அருகில் இருக்கும் அணைப்பட்டி எனும் ஊர்.
அணைப்பட்டி என்ற பெயரிலிருந்தே இங்கு ஒரு அணை இருக்கக் கூடும் என்பதை ஊகித்திருப்பீர்கள். ஆயினும் இவ்வூரின் பெருமைக்கு அணை மட்டுமே முக்கிய காரணமன்று. இங்கு இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலும் ஆகும். மதுரை-கொடைக்கானல் சாலையில் உள்ள நிலக்கோட்டை எனும் ஊருக்கு மிக அருகில் உள்ளது அணைப்பட்டி. மதுரையிலிருந்து நேரடியாக இவ்வூருக்குச் செல்லும் நகரப் பேருந்துகள் மிகவும் அரிதே. நிலக்கோட்டைக்குச் சென்று அங்கிருந்து செல்வது சுலபம்.
பேரணை என்று அழைக்கப்படும் இங்குள்ள அணை வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் வைகை ஆற்றின் நீர் இரண்டு கால்வாய்களின் வழியே சென்று மதுரை மாவட்டத்தை வளப்படுத்துகிறது. இவ்விரு கால்வாய்களின் குறுக்கே ஆங்கிலேயரால் 1892 ஆம் வருடம் கட்டப்பெற்ற தொன்மையான் பாலம் ஒன்று உள்ளது. இப்பாலத்தைக் கடந்து சென்றால் நாம் சற்றும் எதிர்பாராத அழகான, சிறிய ஆஞ்சனேயர் கோயில் உள்ளது. இக்கோயிலின் வரலாற்றை அடுத்த பதிவில் காண்போம்.