Monday, April 03, 2006

ஊர் சுற்றலாம் வாங்க- அணைப்பட்டி


பாண்டவர்கள் கெளரவர்களிடம் சூதாட்டத்தில் தோற்றதனால் நாட்டையும் செல்வத்தையும் விட்டு காடு புக நேர்ந்தது.காட்டு வழியே நடந்து வரும்பொழுது தாகம் எடுக்கவே, அவர்கள் அருகிலுள்ள ஒரு குகையில் அமர்ந்தனர்.ஒரு சிறிய மலையின் மேல் இருந்த அக்குகையிலிருந்து பார்க்கும் பொழுது,கீழே சற்று தூரத்தில் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது.அங்கிருந்து தண்ணீர் எடுத்துவர பீமனை அனுப்பினார் தர்மர்.

தண்ணீர் எடுக்கச் சென்று கொண்டிருக்கும்பொழுது,தன் பாதையை ஒரு குரங்கின் வால் தடுப்பதைக் கண்டான் பீமன்.தான் மிகவும் அவசரமாகச் சென்றுகொண்டிருப்பதாகவும், தனக்கு வழிவிடக் கோரியும் அவன் அக்குரங்கிடம் கேட்டான்.சற்று வயது அதிகமான அக்குரங்கு,தன்னால் நகர இயலாது என்றும்,வேண்டுமானால் தன் வாலை அவனே நகற்றி வைத்துவிட்டுச் செல்லலாம் என்றும் கூறியது.பலத்தில் தன்னை மிஞ்ச எவருமே இல்லை என்ற அகந்தையில் இருந்த பீமன், அதன் வாலை நகற்றத் தொடங்கினான்.அவன் தன் பலத்தை முழுவதுமாக உபயோகித்தும் கூட அந்த வால் நகரவில்லை.தனது சக்தி மிகப்பெரியது அன்று,சிறியதே என்பதை அறிந்து அகந்தையிலிருந்து அவன் வெளிவந்த அடுத்த விநாடியே அக்குரங்கின் உண்மையான உருவத்தைக் கண்டான்.பீமன்முன் ஆஞ்சநேயர் அழகாகக் காட்சி தந்தார்.

பீமனுக்கு அனுமன் காட்சி தந்த அந்த இடத்தில் அமையப் பெற்றதே அணைப்பட்டி ஆஞ்சனேயர் கோயிலாகும்.பாண்டவர்கள் தங்கியிருந்த மலை,சித்தர் மலை என்று அழைக்கப்பட்டு வருகின்றது.அக்குகைக்குச் செல்ல வேண்டுமானால்,நடந்தேதான் செல்ல வேண்டும்.தண்ணீர் இருப்பதாக அவர்கள் கண்டது வைகை ஆறாகும்.

இங்குள்ள ஆஞ்சனேயர்,ஒரு கண்ணால் பக்தர்களுக்கு தரிசனம் தந்துகொண்டும் மற்றொரு கண்ணால் அயோத்தியைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறார்.வால் தலைவரை எழும்பி நீளமாக இருக்க, நான்கு கைகளைக் கொண்டு விளங்குகிறார்.மழைகாலத்தில் ஆஞ்சனேயருக்கு அடியில் தண்ணீர் ஊற்றெடுத்து, அவரது கால்களை நனைப்பது சிறப்பு.மதுரையில் இருப்போர் அவசியம் சென்று வரவேண்டிய இடம்.

Wednesday, February 15, 2006

ஊர் சுற்றலாம் வாங்க

நான் சென்று வந்த, ஆனால் மக்களுக்கு அதிகம் தெரியாத சில இடங்களைப் பற்றி இனி வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலில் நாம் காணவிருப்பது, மதுரைக்கு அருகில் இருக்கும் அணைப்பட்டி எனும் ஊர்.

அணைப்பட்டி என்ற பெயரிலிருந்தே இங்கு ஒரு அணை இருக்கக் கூடும் என்பதை ஊகித்திருப்பீர்கள். ஆயினும் இவ்வூரின் பெருமைக்கு அணை மட்டுமே முக்கிய காரணமன்று. இங்கு இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலும் ஆகும். மதுரை-கொடைக்கானல் சாலையில் உள்ள நிலக்கோட்டை எனும் ஊருக்கு மிக அருகில் உள்ளது அணைப்பட்டி. மதுரையிலிருந்து நேரடியாக இவ்வூருக்குச் செல்லும் நகரப் பேருந்துகள் மிகவும் அரிதே. நிலக்கோட்டைக்குச் சென்று அங்கிருந்து செல்வது சுலபம்.

பேரணை என்று அழைக்கப்படும் இங்குள்ள அணை வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் வைகை ஆற்றின் நீர் இரண்டு கால்வாய்களின் வழியே சென்று மதுரை மாவட்டத்தை வளப்படுத்துகிறது. இவ்விரு கால்வாய்களின் குறுக்கே ஆங்கிலேயரால் 1892 ஆம் வருடம் கட்டப்பெற்ற தொன்மையான் பாலம் ஒன்று உள்ளது. இப்பாலத்தைக் கடந்து சென்றால் நாம் சற்றும் எதிர்பாராத அழகான, சிறிய ஆஞ்சனேயர் கோயில் உள்ளது. இக்கோயிலின் வரலாற்றை அடுத்த பதிவில் காண்போம்.

Monday, February 13, 2006

தமிழ்த் திரைப்பட விருதுகள்


தமிழக அரசு 2003 மற்றும் 2004 ஆண்டிற்கான திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது. வழக்கம்போல் இல்லாமல் இம்முறை சொதப்பல்கள் சற்று குறைவு என்று கூறலாம். சில விருதுகளைப் பார்க்கும்பொழுது, எந்த அடிப்படையில் இவர்கள் விருதுகளை அறிவிக்கிறார்கள் என்பது புதிராகவே உள்ளது.

2004 ஆண்டிற்கான சிறந்த நடிகராக M.குமரன் s/o மஹாலஷ்மி படத்திற்காக ‘ஜெயம்’ ரவி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அப்படத்தில் இவரது நடிப்பு நன்றாகவே இருந்தாலும் விருது பெறத் தகுதியானதா என்பதே கேள்விக் குறி.இதே வருடத்தில் வெளிவந்த ‘விருமாண்டி’ படத்தில் கமலது நடிப்பும் பேரழகன் படத்தில் சூர்யா நடிப்பும் நன்றாகவே இருந்தது.இதனைவிட சிறப்பானதா ரவியின் நடிப்பு?

தேசிய விருதுகள் வழங்கும் விதிகளின்படி,பேரழகன் திரைப்படம் மலையாள படத்தைச் சார்ந்து எடுக்கப்பட்டது என்ற காரணத்தால் சூர்யாவிற்கு விருது வழங்கவில்லையென்று வைத்துக் கொண்டோமானால் அதே படத்தில் நடித்த ஜோதிகாவிற்கு சிறந்த நடிகை விருது எவ்வாறு வந்தது.

அடுத்ததாக 2003 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக பாரதிராஜாவின் ‘ஈர நிலம்’ தேர்வாகியுள்ளது. எதற்காக இப்படத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்? கருத்திற்காகவா அல்லது எடுக்கப்பட்ட முறைக்காகவா – ஆண்டவனுக்கே வெளிச்சம். அருணாச்சலம் போன்ற மசாலா திரைப்படங்களை அங்கீகரித்த அவலம் ஏற்கனவே நடந்துள்ள நிலையில் ஈரநிலம் தேர்வாகியுள்ளது பெரும் வியப்பல்ல.

ஒளிப்பதிவிற்காக ஏகாம்பரம் (இயற்கை) , பாடகியாக ஹரினி (பார்த்திபன் கனவு),நடன இயக்குனராக அசோக் (திருமலை)போன்ற விருதுகள் நன்று.

ஒரு முறை சொல்லிவிடு போன்ற படங்களைக்கூட விடாமல் பார்த்து அதற்கு விருதும் வழங்கியதை பாராட்டாமல் இருக்க முடியாது.

மொத்ததில் எந்த வித வெளிபாதிப்பும் இன்றி நேர்மையான நோக்கோடு எப்போது தமிழ் திரைப்பட விருதுகள் வெளிவரும்?!


செய்தி: http://sify.com/movies/tamil/fullstory.php?id=14139351

Sunday, December 04, 2005

திரைக் கவிதைகள் [நிறைவு]

ஒரு வழியாக நம் நாயகி காதலனைச் சந்திந்துத் தன் காதலைக் கூறுகிறாள். இப்பொழுது அவன் மனம் எந்த அளவிற்கு ஆனந்தம் அடைந்திருக்கும், என்பதைப் பின்வரும் பாடல் அழகாக உணர்த்துகிறது.

காதல் சொன்ன கணமே
கடவுளைக் கண்ட கணமே
காற்றாய் மாறுது மனமே …………..
[பாய்ஸ்}

சிறகுகள் நீளுதே
பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே
துள்ளித் துள்ளிப் போகுதே..............................................

புதுவித அனுபவம்
நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும்
அள்ளி அள்ளிப் பருகுதே............................

[காக்க காக்க]

எனக்குப் பிடித்த காதல் கவிதைகளை ஒரு கதை வடிவில் வரிசைப் படுத்தினேன். அவ்வளவே. நிஜமான கதை படிக்கும் எண்ணத்தில் எப்படி இருவரும் இணைந்தனர் என்றெல்லாம் எண்ண வேண்டாம். என்னைக் கவர்ந்த மற்ற கவிதைகளும் இங்கே,,,,,,,,,,,,,,,,,,,,,,

மேல் இமைகளில் நீ.......
கீழ் இமைகளில் நான்…..
இந்தக் கண்கள் கொஞ்சம்
தூங்கினால் என்ன ?
[சதுரங்கம் ]

பூக்கள் மலரும்போது ஏற்படும் மெல்லிய ஓசையினால் தன் காதலி விழித்துக்கொள்வாளோ என நாயகன் கருதுவது போலவரும் இந்த பாடல்

மொட்டுகளே மொட்டுகளே
மூச்சுவிடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகிறாள்
காலையில் மலருங்கள்
பொன் அரும்புகள் மலர்கயிலே
மென்மெல்லிய சப்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால்
என் இதயம் தாங்காது...

[ரோஜாக் கூட்டம்]

சங்கமிக்கும்
இரண்டு ஊதுபத்திப் புகையின்
அசைவில்
நீ............ நான்,,,,,,,,,,,,,,,,,,,,

[முற்றும்]

Thursday, December 01, 2005

திரைக் கவிதைகள் [2]

நாயகன் விட்டுச் சென்ற பின்பே, தனக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை காதலி உணர்கிறாள். அவளது எண்ணங்கள் கவிதையாக,

பூமியென்பது தூரமானதே
நட்சத்திரங்கள் பக்கமானதே.............
மனிதர் பேசும் பாஷை மறந்து
பறவைகளோடு பேசத் தோன்றுதே............

தன் மன மாற்றத்திற்குப் பெயர்தான் காதலா என நினைக்கிறாள்.
          
இது காதலா  
இதுதான் காதலா
இதுவே காதலா
இதுவும் காதலா ?..............             [பூவேலி ].

தன் காதலை உணர்ந்து காதலனை நினைத்துப் பாடுகிறாள் இவ்வாறு.................

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை விட்டு விட்டுச் சென்றாயே................. [ஆறு ]

பின்பு தன் காதலனைத் தேடத் தொடங்குகிறாள் காதலும் கவிதையுமாக பின்வருமாறு.

பூங்காற்றிலே உன் சுவாசத்தைத் தனியாகத் தேடிப் பார்த்தேன்
கடல்மேல் ஒரு துளி விழுந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்  [உயிரே]

இதற்கிடையே காதலனும்,
     தாமதிக்கும் ஒவ்வொரு கனமும்
     தவணை முறையில் மரணம் நிகழும்
     அருகில் வாராயோ விரல்கள் தாராயோ நீ......................................  [காக்க காக்க]

என காதலியின் வருகைக்காக உருகுகிறான்.  இருவரும் சந்தித்தனரா?

திரைக் கவிதைகள்

எனக்குப் பிடித்த, நான் ரசித்த சில திரைக் கவிதைகளை இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
தனக்கு ஒரு காதலி கிடைக்க மாட்டாளா என்று தேடி அலைகிறான் நம் நாயகன். அவனது தேடலைக் குறிக்கிறது பின்வரும் கவிதை.

          தண்டவாளத்தில்
தலைசாய்த்துக் காத்திருக்கும்
ஒற்றைப்பூ
என் காதல்....................
நீ இரயிலில் வருகிறாயா ?
நடந்து வருகிறாயா ?               [ சதுரங்கம் ]
    
இப்படி காதலியின் வருகைக்காக காத்திருக்கும் காதலன், தன் மனதைக் கவர்ந்த பெண்ணைக் கண்டவுடன்,
          முதன்முதலாய் உன்னைப் பார்க்கிறேன்
          ஒன்றைக் கேட்கிறேன்
          என்னைத் தெரிகிறதா ?
என்று கேட்கிறான். “முதல்முறையாகப் பார்ப்பதாக நீயே கூறிவிட்டு பின்பு தெரிகிறதா என்று கேட்டாள் என்ன கூறுவது” என காதலி கேட்பதற்கு முன்பு அவனே தொடர்கிறான்,
          ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும்
          அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா ?......
[ வருஷமெல்லாம் வசந்தம்]

இப்படியாக நாயகன் தன் முதல் சந்திப்பிலேயே காதலைக் கூற, அவள் நிராகரித்துச் சென்று விடுகிறாள்.

ஆயினும் அவளுக்குத் தன் காதலை, தன் வருத்தத்தை உணர்த்த நினைக்கிறான் பின்வரும் வரிகள் மூலம்......
     நீயாக நீ என்னை
     விரும்பாத போதும்
     பொய் ஒன்று சொல் கண்ணே
     என் ஜீவன் வாழும்          [ காதல் தேசம், வாலி ]

     ஒரு பொய்யாவது சொல் கண்ணே
     உன் காதல் நான்தான் என்று.....
     அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்........  [ ஜோடி, வைரமுத்து ]

அப்படி இருந்தும் காதலை ஏற்றுக் கொள்ள அவள் மறுத்ததால்,
காதலன் அவளிடம் விடைபெற்று கிளம்புகிறான் இவ்வாறு.

     காதல் வந்தால் சொல்லி அனுப்பு
     உயிரோடிருந்தால் வருகிறேன்
தொடர்ந்து,
     கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
     கடல் நீர் மட்டம் கூடுதடி..................            [ இயற்கை ]

அவனது காதலை அவள் ஏற்றுக் கொண்டாளா????

Sunday, November 20, 2005

உரைநடை ஆசிரியர்கள் குறித்து..........

உரைநடை ஆசிரியர்கள் குறித்து............


சமீபத்தில் பட்டிமன்றம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். கம்பராமாயணத்தில் வரும் சில வரிகளுக்கு வெவ்வேறு பொருள்களைக் கூறி இரு தரப்பினரும் விவாதம் நடத்திக் கொண்டிருந்தனர்.  பாடலை எழுதியவரே விளக்கத்தையும் எழுதினால் நன்றாக இருக்குமே, இத்தகைய விவாதங்களும் இல்லாமல் போயிருக்குமே என என்னுடைய எண்ணங்கள் வேறு திசையில் செல்லத் தொடங்கின..............

உரைநடையாளர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கும் பொருட்டு கவிஞர்கள் சாதாரணமாக எழுதியவற்றைக் கூட சிறப்பாகக் கூறி அவர்களுக்கு பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுப்பது சாத்தியமாகின்றது.

எடுத்துக்காட்டாக கம்பனின் திறனை அறிவதற்காக கூறப்படும் கதையையும் பாடலையும் நோக்கலாம்........

மன்னனைப் புகழ்ந்து சிறப்பான கவிதை எழுதுபவருக்கு பரிசு கொடுக்கப்போவதாக நாடு முழுவதும் முரசு தட்டப்படுகின்றது......
இதைக் கேட்ட ஒரு பெண் தன் கணவனையும் கவிதை எழுதுமாறு கூறினாள். என்ன எழுதுவது என அவன் கேட்க ‘கன்னா பின்னா’ என்று எதை வேண்டுமானாலும் எழுது என்று அவள் கூறினாள்.

மறுநாள் அரசவை நோக்கி அவன் கிளம்பினான். வழியில் ‘மன்னா தென்னா’ என இருவர் பேசிக்கொள்வதை கவனித்து எழுதிக்கொண்டான். இன்னும் சற்று தூரம் செல்ல, சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவர்கள் ஒரு சிறுவனை ‘மண்ணுண்ணி மாப்ளே’ என்று கிண்டலடிப்பதைக் கேட்டு அதையும் எழுதிக்கொண்டான்.

அரச சபையில் தான் கேட்ட அனைத்தையும் சேர்த்து,

‘ கன்னா பின்னா
  மன்னா தென்னா
   மண்ணுண்ணி மாப்ளே’

எனச் சேர்த்துக் கூறி தன் கவிதையை முடித்தான். இதைக் கேட்ட சபை உறுப்பினர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க, அங்கு புலவராக இருந்த கம்பர் மட்டும் அவன் கவிதையைப் புகழ்ந்து பரிகளைக் கொடுத்தார். இப்படிப்பட்ட ஒரு உளரலுக்குப் பரிசா என அனைவரும் கேட்க, அது உளரல் இல்லை, அழகான கவிதை என்று கூறி அதன் விளக்கத்தைக் கம்பர் கூறினார்.

கம்பரது விளக்கம் :

கன்னா பின்னா -- தானம் கொடுப்பதில் வள்ளலாகிய கர்ணனுக்குப் பின்னால் அவனைப் போன்று தோன்றிவரே  
மன்னா தென்னா தென் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் மன்னவனே
மண்ணுண்ணி மாப்ளே --- மண்ணை உண்டவர் கிருஷ்ணர். அவரது மாப்பிள்ளை முருகப் பெருமான். அத்தகைய முருகனைப் போன்று அழகிலும் வீரத்திலும் சிறந்தவரே

என இவ்வாறு பொருள் கூறினார்.

சில நேரங்களில் கவிதை சிறப்பாக இருந்து விளக்கம் தெளிவாக அமையவில்லை என்றாலும் பிரச்சினையே. உரைநடையாளர்களால்
கவிதை/ செய்யுளின் சுவை கூடுவதென்றாலும் எழுதியவர்களே விளக்கத்தையும் அளித்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் என்றே என் இன்றைய எண்ணங்கள் செல்கின்றன.
Free Web Counter
Free Hit Counter